பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் வந்தாலே வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் வாரி வழங்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. ’தேர்தல்களில் வாக்குகளை பணம் கொடுத்து வாங்கும் போக்கு' என்ற தலைப்பில் டெல்லியைச் சேர்ந்த ஊடக ஆய்வு மையம் அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,'' மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் வாக்குக்கு பணம் கொடுக்கும் வழக்கம் அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ்வாழும் மக்களில் 78 சதவீதத்தினரின் வாக்குகள் பணம் கொடுத்து வாங்கப்படுகின்றன; ஒட்டுமொத்த வாக்காளர்களில் 34 சதவீதத்தினர் பணம் பெற்றுக் கொண்டு தான் வாக்களிக்கின்றனர்'' என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஜனநாயகப் படுகொலையைத் தடுக்க தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வாக்காளர்களுக்கு பணம் தரப்படுவதை தடுக்கவும், அதையும் மீறி தரப்பட்டால் அதற்குக் காரணமானவர்களை தண்டிக்கவும் சட்டத்தில் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் தேர்தல் ஆணையம் பயன்படுத்த வேண்டும். பணம் தருவது உள்ளிட்ட முறைகேடுகளை செய்து வெற்றி பெறுபவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க தடை விதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். அப்போது தான் இந்தியாவில் ஜனநாயகப் படுகொலைகளை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment