சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
1987–ம் ஆண்டு இந்தியா–இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி 13–வது அரசியல் சட்டத் திருத்தம் உருவானது. தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் இந்த 13–வது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவோம் என்று தற்போதைய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பால் இலங்கை வாழ் தமிழர்களின் நீண்ட நாள் கனவு நனவாகும் சூழல் உருவாகியுள்ளது.
இலங்கை பிரதமர் அறிவித்திருப்பது இலங்கையில் வாழும் சிங்கள மக்கள், இலங்கை வாழ் தமிழ் மக்கள், சிறுபான்மை மக்கள் அனைவருக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த 13–வது சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதனை காலம் தாழ்த்தாமல் இலங்கை அரசு எழுத்திலும், செயலிலும் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மான உணர்வினை புரிந்து கொண்டு நியாயமாக, பாரபட்சமின்றி வெளிப்படையான விசாரணை நடத்தி குற்றம் புரிந்தவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த தமிழர்களின் எண்ணமாகும். அதை இந்த புதிய அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment