பாட்னா,
மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிலவுகிற மாநிலங்களில் ஒன்று, பீகார்.
இங்குள்ள மாவோயிஸ்டுகள், இந்திய ரெயில்வேயிடம் ரூ.1 கோடி ரொக்கப்பணமும், துப்பாக்கிகள், சிறிய ரக துப்பாக்கிகள், தானாக குண்டு நிரப்பும் துப்பாக்கிகள் ஆகியவற்றில் தலா 50 எண்ணிக்கையும், 3 ஆயிரம் குண்டுகளும் வரியாக தர வேண்டும் என கேட்டுள்ளனர்.
அப்படி தராவிட்டால், பீகாரில் மோதிஹாரி–பானியவா ரெயில் நிலையங்களுக்கு இடையேயான ரெயில்பாதை குண்டு வைத்து தகர்க்கப்படும் என மிரட்டி உள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள், அங்குள்ள கோட்ட ரெயில்வே மானேஜருக்கு கடிதம் எழுதி உள்ளனர். கடிதத்தில், மாவோயிஸ்டுகள் ஏரியா தளபதி ராம்ஜி சாஹ்னி என்பவர் கையெழுத்திட்டுள்ளார்.
‘‘கடிதத்தில் தொடர்பு கொள்வதற்காக 3 செல்போன் எண்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு செல்போன்களின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன; ஒரு செல்போனில் மணி ஒலித்தாலும் யாரும் எடுத்துப் பேசவில்லை’’ என கோட்ட பாதுகாப்பு அதிகாரி குமார் நிஷாந்த் தெரிவித்தார்.
இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே பீகாரில் ரெயில் தடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
0 comments:
Post a Comment