![](http://img.dailythanthi.com/Images/Article/201501240147078738_India-US-likely-to-sign-defence-pact-during-Obama-trip_SECVPF.gif)
ஒபாமாவின் இந்திய வருகையின்போது, அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என தெரிகிறது.
ஒபாமா வருகை
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, நாளை இந்தியாவுக்கு வருகிறார். குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஒபாமாவின் இந்திய வருகையின்போது, இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
ராணுவ ஒப்பந்தம்
அவற்றில், ராணுவ ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என தெரிகிறது. இரு நாடுகளும் தத்தமது போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை ஒருவர் மற்றவரது தளங்களில் நிறுத்திக் கொள்ளவும், எரிபொருள் நிரப்பிக் கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. மேலும், அவசர காலத்தின்போது, ஒன்றுக்கொன்று பாதுகாப்பு அரணாக இயக்கப்படவும் வழி வகுக்கிறது.
இத்தகைய ராணுவ வசதிகளை மற்றொரு நாட்டுக்கு அமெரிக்கா அளிக்க வேண்டுமானால், அதற்கான ஒப்பந்தத்தில், சம்பந்தப்பட்ட நாடு கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க சட்டம் கூறுகிறது. எனவே, இத்தகைய ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்கா கூறி வருகிறது.
பலன்கள்
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ராணுவ மந்திரியாக இருந்த ஏ.கே.அந்தோணி, இந்த ஒப்பந்தத்தை பரிசீலிக்கக்கூட மறுத்து விட்டார். இந்த ஒப்பந்தத்தால், இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படும் என்று அவர் கருதியதே இதற்கு காரணம்.
ஆனால், தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக, இந்தியா-அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை கடந்த புதன்கிழமை முடிவடைந்தது.
அப்போது, ஒப்பந்தத்தை பரிசீலிக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியது. அதற்கு இந்திய தரப்பு, இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு எவ்வகையில் பலன் அளிக்கும் என்று கேட்டது. இந்த ஒப்பந்தத்தால், இந்திய உளவு விமானங்களும், கப்பல்களும் அமெரிக்க செயற்கைகோள்கள் மூலம் முக்கிய தகவல்களை பெற முடியும் என்ற நன்மையும் உள்ளது.
கையெழுத்து
எனவே, ஒப்பந்தத்துக்கு ஆதரவான மனநிலைக்கு மத்திய அரசு மாறி உள்ளது. ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது பற்றிய அறிவிப்பு, ஒபாமாவின் இந்திய வருகையின்போது வெளியிடப்படும் என்று தெரிகிறது.
0 comments:
Post a Comment