Thursday 22 January 2015

திருநங்கை பற்றிய காட்சிகளை அனுமதித்தது ஏன்? ஐ படத்தை மறுதணிக்கை செய்ய முடியாது திரைப்பட தணிக்கை அதிகாரி பேட்டி

சென்னை, 
கதைக்கு தேவைப்பட்டதால் திருநங்கை தொடர்பான காட்சிகளை அனுமதித்தோம் என்றும் ‘ஐ’ திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய முடியாது என்றும் திரைப்பட தணிக்கை வாரிய மண்டல அதிகாரி வி.பக்கிரிசாமி தெரிவித்தார்.
‘ஐ’ திரைப்படம்
தமிழகத்தில் சமீபத்தில் ‘ஐ’ திரைப்படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தி காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளதாகவும், அக்காட்சிகளை திரைப்படத்தில் இருந்து நீக்க வலியுறுத்தியும் திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்தும், திரைப்படத் தணிக்கை வாரியத்தின் (சென்சார் போர்டு) மண்டல அதிகாரி வி.பக்கிரிசாமி, சென்னையில் ‘தினத்தந்தி’ நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
மறுதணிக்கைக்கு வாய்ப்பு?
கேள்வி:– பொதுவாக திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோரி போராட்டங்கள் நடத்தப் பட்டால், சம்பந்தப்பட்ட திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய வாய்ப்பு உள்ளதா?
பதில்:– தணிக்கை சான்றிதழ் வழங்கிய பிறகு எவரும் குறுக்கிட முடியாது. இருந்தாலும் பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஒரு முறை தணிக்கை செய்யப்பட்ட திரைப்படத்தை மீண்டும் வாங்கி மறுதணிக்கை செய்ய மத்திய அரசுக்கு உரிமை கிடையாது.
தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம். ஒரு முறை திரைப்படத்தை பார்க்கும் போதே, அண்டை நாடுகளின் நல்லுறவு பாதிக்கும் வகையிலும், நீதிமன்ற அவமதிப்பு மற்றும் தனிப்பட்ட நபர்கள் அவமதிப்பு போன்ற சமுதாயத்தை பாதிக்கும் வகையிலான காட்சிகள் மற்றும் வசனங்கள் குறிப்பாக நொண்டி, முடம் போன்ற வசனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
கதை அமைப்பு
கேள்வி:– ‘ஐ’ படத்தால் திருநங்கைகளுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டுள்ளது?
பதில்:– ‘ஐ’ திரைப்படத்தில் ஒரு திருநங்கை முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றார். அவரை கதாநாயகனும் அவருடைய நண்பனும் பாட்டுப் பாடி கிண்டல் செய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. சமுதாயத்தில் உள்ள ஒரு சிலர் திருநங்கைகளை பார்ப்பது போன்று தான் படத்தின் கதாநாயகனும் திரைப்படத்தில் பார்க்கிறார். இந்த ஒரு காட்சியை மட்டும் வைத்துக் கொண்டு போராட்டம் நடத்துவது சரியான அணுகுமுறையல்ல. படத்தின் கதை அமைப்பிலேயே அப்படி ஒரு காட்சி தேவைப்படுவதால் அதனை அனுமதித்தோம். இதனை சாதகமாக எடுத்து கொண்டு அடுத்த நிலைக்கு போக வேண்டும்.
3 கமிட்டியினர் தணிக்கை
கேள்வி:– இந்த திரைப்படத்தை தணிக்கை செய்தவர்களின் கருத்து எதுமாதிரியாக இருந்தது?
பதில்:– ‘ஐ’ திரைப்படத்தை பொருத்த வரையில் திரைப்பட தேர்வு கமிட்டி, மறு தேர்வு கமிட்டி மற்றும் டெல்லியில் உள்ள ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய மேல்முறையீட்டு ஆணையம் உள்ளிட்ட 3 கமிட்டியினர் தணிக்கை செய்தனர். தயாரிப்பாளர்கள் மட்டும் அல்லாது தணிக்கை வாரிய குழு உறுப்பினர் அனைவருடைய ஆலோசனைப்படித்தான் இந்த படத்துக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்து உடையவர்களை விட, சராசரி மனிதனின் உணர்வுகள் மதிக்கப்படுகிறது.
ஆரோக்கியமான சமுதாயம்
கேள்வி:– சினிமாவை பார்த்து தாங்கள் கிண்டலுக்கு ஆளாக்கப்படுவதாக திருநங்கைகள் கூறுகிறார்களே?
பதில்:– திருநங்கைகளுக்கு ஏற்படும் தனிப்பட்ட பிரச்சினையை போக்க சமுதாயமே சேர்ந்து மாற்ற வேண்டும். அனைவரும் இந்த விஷயத்தில் இணைந்து பாடுபட வேண்டும். மாறாக சினிமாவில் வரும் காட்சிகளை வைத்து முடிவெடுக்க கூடாது. மாறாக காட்சியையும் தடை செய்யுங்கள் என்று கூற கூடாது. திரைப்பட காட்சியை பார்த்து கிண்டல் செய்யும் வக்கிரபுத்தி கொண்டவர்களை போலீசில் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதே ஆரோக்கியமான சமுதாயத்துக்கு அழகாகும்.
கேள்வி:– தயாரிப்பாளர்களே முன்வந்து பிரச்சினைக்குரிய காட்சியை நீக்கி விடுவதாக இருந்தால், தணிக்கை வாரியம் அதற்கு அனுமதி வழங்குமா?
பதில்:– தணிக்கை செய்யப்பட்ட திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க தயாரிப்பாளர்களை தணிக்கை வாரியம் நிர்ப்பந்திக்க முடியாது. அதற்கு சட்டத்திலும் இடம் இல்லை. தயாரிப்பாளர்களே முன்வந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்குவதாக இருந்தால், அதற்கு ஆட்சேபனை தெரிவிக்க மாட்டோம்.
அதிகாரம் இல்லை
கேள்வி:– திருநங்கைகள் அமைப்பினர் உங்களை சந்தித்தார்களா? என்ன கோரிக்கை விடுத்துள்ளனர்?
பதில்:– ‘ஐ’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோரிக்கை விடுத்தனர். அவர்களுடைய பிரச்சினை குறித்து திரைப்படத்தின் தயாரிப்பாளரிடம் முறைப்படி தெரிவிக்கப்படும். ஆனால் படத்தில் வரும் காட்சியை நீக்க தயாரிப்பாளரை நிர்ப்பந்திக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை. அதேபோல் திருநங்கைகளையும் தணிக்கை குழு உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு மண்டல அதிகாரிக்கு அதிகாரம் இல்லாததால், மத்திய அரசு தான் உறுப்பினர்களை நியமித்து வருகிறது.
கேள்வி:– சமீப காலமாகவே தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு எதிர்ப்புகள் வருகின்றனவே?
பதில்:– சமுதாயத்தில் தங்கள் உரிமையை நிலைநாட்ட கோரி எதிர்ப்பு தெரிவிப்பது என்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால் சமுதாயத்தில் புரட்சிகரமான கருத்துக்களும் தேவைப்படுவதால், புதிய பரிமாணத்துடன் உருவாக்கப்படும் திரைப்படங்களையும், படைப்பாளிகளையும் நாம் தடுத்து விட கூடாது.
முடிவு தான் என்ன?
கேள்வி:– இதற்கு முடிவு தான் என்ன?
பதில்:– சினிமாவில் ஏற்படும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோரி பல்வேறு அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவை நிலுவையில் இருந்து வருகிறது. இருந்தாலும் சினிமாவையே பார்த்துக் கொண்டிருக்காமல் சமுதாய வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive