புதுடெல்லி,
நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
கோர்ட்டு உத்தரவு
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், தனது பதவிக்காலத்தில், நிலக்கரி இலாகாவையும் சில ஆண்டுகள் கவனித்து வந்ததால், நிலக்கரி சுரங்க ஊழலில் அவர் மீதும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
ஆனால், ஊழலில் அவருக்கு தொடர்பு இல்லை என்று சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையை சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி பாரத் பரஷார் ஏற்கவில்லை. ஊழலின் பல்வேறு அம்சங்கள் குறித்து முதலில் மன்மோகன்சிங்கிடம் விசாரணை நடத்துவதுதான் சரியாக இருக்கும் என்று கடந்த மாதம் 16–ந் தேதி அவர் உத்தரவிட்டார்.
விசாரணை
அதன்படி, மன்மோகன்சிங்கிடம் அவரது வீட்டில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியதாக டெல்லி வட்டாரங்களில் கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது.
கடந்த 2005–ம் ஆண்டு, ஹிண்டால்கோ என்ற நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் நடந்த ஊழல் தொடர்பாக இவ்விசாரணை நடந்ததாக தெரிகிறது. தொழில் அதிபர் குமார் மங்கலம் பிர்லா, மன்மோகன்சிங்குக்கு 2 கடிதங்கள் எழுதி கேட்டுக்கொண்டதன் பேரில், இந்த ஒதுக்கீடு நடந்துள்ளது. இதுபற்றி மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது.
27–ந் தேதிக்குள் விசாரணை நிலவர அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டி இருப்பதால், அதற்கு முன்பாக இந்த விசாரணையை சி.பி.ஐ. மேற்கொண்டதாக தெரிகிறது.
மறுப்பு
ஆனால், இத்தகைய விசாரணை எதுவும் நடக்கவில்லை என்று மன்மோகன்சிங்கின் உதவியாளர் மறுத்துள்ளார். சி.பி.ஐ. செய்தித்தொடர்பாளர் காஞ்சன் பிரசாத்திடம் கேட்டபோது, அவர் இதை உறுதிப்படுத்தவோ, நிராகரிக்கவோ மறுத்துவிட்டார்.
0 comments:
Post a Comment