Tuesday 20 January 2015

ஒபாமாவை பாதுகாக்க அமெரிக்க வீரர்கள்: அமெரிக்காவின் கோரிக்கைகளை இந்தியா நிராகரித்தது

குடியரசு தின அணிவகுப்பில், ஒபாமாவுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான அமெரிக்காவின் கோரிக்கைகளை இந்தியா நிராகரித்தது.

பாதுகாப்பு ஏற்பாடு
குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமெரிக்க ரகசிய போலீஸ் உயர் அதிகாரிகள், டெல்லியில், இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

அப்போது, இந்திய அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை அளித்தனர். அதில், குடியரசு தின அணிவகுப்பு நடக்கும் ராஜபாதையை எதிர்நோக்கி உள்ள கட்டிடங்களின் உச்சியில், துப்பாக்கியால் குறிபார்த்து சுடுவதில் வல்லமை மிக்க அமெரிக்க வீரர்களைத்தான் நிறுத்த வேண்டும் என்பதும் ஒன்றாகும்.

இந்தியா நிராகரிப்பு
ஆனால் அந்த கோரிக்கையை இந்திய அதிகாரிகள் நாகரிகமாக நிராகரித்து விட்டனர். ‘இந்திய அதிகாரிகள் நன்கு பயிற்சி பெற்றவர்கள். மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் திறன் பெற்றவர்கள். எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகளில் தலையிடாதீர்கள்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களும் அணிவகுப்பை பார்வையிடுவார்கள். எனவே, அமெரிக்க வீரர்களை நிறுத்துவது தேவையற்றது’ என்று இந்திய அதிகாரிகள் திட்டவட்டமாக கூறி விட்டனர்.

விமானம் பறக்க தடை
மேலும், அணிவகுப்பு பாதை மீது விமானம் பறக்க தடை விதிக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் வற்புறுத்தினர். அதையும் இந்திய அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். அப்படி தடை விதித்தால், அணிவகுப்பின்போது, இந்திய விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டியதாகி விடும் என்று அவர்கள் கூறினர்.

தனிப்பாதை
ஒபாமா பங்கேற்கும் ஒவ்வொரு இடத்தில் இருந்தும் மூன்று பாதைகளை பிரத்யேகமாக ஒபாமாவுக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும் என்றும், அப்பாதைகளை இந்திய தலைவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, அதையும் இந்திய அதிகாரிகள் ஏற்கவில்லை. பயண பாதை திட்டம் வகுப்பது, தங்களின் உரிமை என்றும், சிறப்பு விருந்தினருக்கான பாதையில்தான், இந்திய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்களும் செல்ல வேண்டி இருக்கும் என்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறினர்.

தனி காரில் வருவாரா?
அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பவர்கள், எந்த நாட்டுக்கு சென்றாலும், அவர்களுக்கென உயர் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ‘பீஸ்ட்’ காரை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இந்திய குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர், நமது ஜனாதிபதியுடன் ஒரே காரில் மேடைக்கு வருவது பாரம்பரிய வழக்கம் ஆகும்.

எனவே, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் குண்டு துளைக்காத காரில் ஒபாமா வருவதா? அல்லது தனது காரில் வருவதா? என்பது பற்றியும் இந்த ஆலோசனையின்போது விவாதிக்கப்பட்டது. ஒபாமா தனது காரில்தான் வர வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் வற்புறுத்தினர்.

ஒருவேளை இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், வெளிநாட்டில் தனது காரில் பயணிக்காத ஒரே அமெரிக்க ஜனாதிபதி என்ற பெயரை ஒபாமா பெறுவார் என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive