![இலங்கையில் 13-வது சட்டத்திருத்தம் அமல் எப்போது? தனியார் தொலைக்காட்சிக்கு ரணில் பேட்டி](http://mmimages.maalaimalar.com/Articles/2015/Jan/db0a9c17-4b4c-4495-ba16-621ab713fcf8_S_secvpf.gif)
முன்னணி தொலைக்காட்சியான என்.டி.டி.வி.க்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வழங்கிய பேட்டி வருமாறு:-
கேள்வி: ரணில் விக்ரமசிங்கேவின் ஆதரவு இல்லாமல் சிறிசேனா அதிபராகி இருக்க முடியாது என பலர் கூறுகின்றனர். அப்படியென்றால் நீங்கள் தானே இத்தேர்தலில் கிங் மேக்கர்?
பதில்: இலங்கை வாழ் மக்கள்தான் உண்மையான கிங் மேக்கர்கள். தங்களுக்கு அரசர் தேவையில்லை, அதிபர்தான் தேவை என்று மக்கள் முடிவெடுத்தனர். அதனால்தான் ராஜபக்சேவை மக்கள் தூக்கி எறிந்தனர். பொதுவான வேட்பாளரை நிறுத்துவது என எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி முடிவு செய்ததும் வெற்றிக்கு முக்கிய காரணம்.
கேள்வி: அமைதியாக பதவி மாற்றம் நிகழ்ந்தது என்று கூறப்படும் வேளையில், தோல்வியடைந்த பின்பும் ராணுவத்தின் உதவி மூலம் ராஜபக்சே அதிகாரத்தில் தொடர முயன்றதாக கூறப்படுவது பற்றி?
பதில்: ராஜபக்சே எனக்கு ஒரு செய்தி அனுப்பினார். தேர்தலில் தான் தோல்வியடைந்து விட்டதாகவும் தொலைபேசியில் என்னை தொடர்பு கொள்ளுமாறு அதில் கூறியிருந்தார். தொலைபேசியில் பேசுவதற்கு பதிலாக நேரில் வந்து பேசுகிறேன் என்று கூறி அலரி மாளிகைக்கு சென்றேன். அவர் தோல்வியை ஒப்புக்கொண்டார். பின்னர் அதிபர் மாற்றம் தொடர்பாக இருவரும் விரிவாக விவாதித்தோம்.
கேள்வி: அப்படியானால் ஆட்சியில் தொடர அவர் எந்த வம்பு தும்புகளிலும் ஈடுபடவில்லையா?
பதில்: அப்படி அவர் எந்த வம்பு தும்புகளிலும் ஈடுபடவில்லை.
கேள்வி: இந்த ஆட்சிக்கு முக்கியமான சக்தியாக நீங்கள்தான் விளங்குகிறீர்கள் என்று பலர் நினைக்கின்றனர். இது முற்றிலும் ரணில் அரசாகதான் இருக்கப்போகிறது. சிறிசேனா அரசாக இருக்காது என்று கூறப்படுவது உண்மையா?
பதில்: நல்லது. மைத்ரிபால சிறிசேனாவை நாங்கள் அதிபராக தேர்வு செய்துள்ளோம். அரசமைத்த அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து ஆட்சியை நல்ல விதமாக நடத்தும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பது என்ற சட்டத்திருத்தத்தை கொண்டு வர உள்ளோம். அதன் பிறகு வரும் மே அல்லது ஜூன் மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும். அதில் யார் பிரதமராக வேண்டும் என்றும், அரசை யார் தலைமையேற்று நடத்த வேண்டும் எனவும் மக்கள் முடிவு செய்வார்கள்.
கேள்வி: சரி. தற்போதைய அரசு தற்காலிகமானது என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் பலரும் இது விக்ரமசிங்கேவின் அரசு என்று நம்புகிறார்கள். ஏனென்றால் அனைத்து கேபினட் மந்திரிகளும் உங்கள் கட்சியை சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.
பதில்: இல்லை. ஐக்கிய தேசிய கட்சி மிகப்பெரிய கட்சி என்று நான் ஏற்கனவே கூறியிருக்கின்றேன். அதனால்தான் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து அதிக எண்ணிக்கையிலான மந்திரிகள் பொறுப்பேற்றுள்ளனர். அதே சமயம் ராஜபக்சேவுக்கு ஆதரவளித்தவர்களுக்கும் நாங்கள் மந்திரி பதவி வழங்கியுள்ளோம்.
கேள்வி: சரி. இனி இந்தியா கவலைப்படும் மூன்று முக்கிய பிரச்சனைகளை பற்றி பேசுவோம்.
முதல் கேள்வி- இலங்கை தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்படுமா அல்லது காகிதத்தில் மட்டுமே இதுபோன்ற வார்த்தைகள் இடம்பெறுமா?
பதில்: 13-வது சட்டத்திருத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் கண்டிப்பாக அமல்படுத்தப்படும். இதற்காகதான் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். கொள்கை அடிப்படையில் 13வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவதில் நாங்கள் அனைவரும் உறுதியாக உள்ளோம்.
கேள்வி: உங்களுக்கு இதில் முழு உடன்பாடு உண்டா?
ரணில்: நிச்சயமாக முழு உடன்பாடு உண்டு. காவல்துறை அதிகாரங்களை பற்றியும், எப்படி அவற்றை செயல்படுத்துவது என்பது குறித்தும் தான் நாங்கள் விவாதித்து வருகிறோம். அவ்வளவுதான்.
கேள்வி: ஆக இதுதான் முக்கியமான விஷயம். சரியா?
ரணில்: இல்லை. காவல்துறை அதிகாரம் என்பது மாகாண வரம்புக்குள் வருவது. அதை தவிர வேறு சில பிரச்சனைகளும் உள்ளன. சுதந்திரமான ஆணையம் அமைத்து எப்படி 13-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவது என முடிவடுக்கப்படும். நாட்டின் பாதுகாப்பு பற்றியே அனைவரும் கவலைப்படுகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் இதை உணர்ந்துள்ளனர். எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் நாங்கள் செயலாற்றி வருகிறோம்.
கேள்வி-பதில் நாளையும் தொடரும்...
0 comments:
Post a Comment